




"ஜேக்கப் டயமண்ட்" உலகின் ஐந்தாவது பெரிய வைரமாகக் கருதப்படுகிறது. இந்த நிறமற்ற வைரம், ஹைதராபாத்தின் கடைசி நிஜாம் தனது மறைந்த தந்தையின் காலணியில் அதைக் கண்டுபிடிக்கும் வரை பல ஆண்டுகளாக இந்த விலைமதிப்பற்ற கல் தொலைந்து போனதாகவும் மறக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. வினோதமாக, நிஜாம் இந்த அரிய பொக்கிஷத்தை இந்திய ரிசர்வ் வங்கியால் 108 கோடி ரூபாய்க்குப் பாதுகாக்கும் வரை, பல ஆண்டுகளாக தாட்கட்டையாக பயன்படுத்தினார். அவரது தந்தை தனது காலணியில் விட்டுச்சென்ற வைரத்தின் மூலம் நிஜாமின் வாழ்க்கையைச் செழிப்பாக்கினார்.
அப்போஸ்தலனாகிய பவுல், கொரிந்து சபையாரின் கவனத்தை இயேசுவிடமாய் திருப்புகிறார்; அவர் நம்முடைய பிதாவாகிய தேவனால் அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட விலையேறப்பெற்ற பொக்கிஷம் (வ.4). கொரிந்தியர்கள் இயேசுவோடு அவருடைய ஆவியின் மூலம் கொண்டிருந்த ஐக்கியத்தின் காரணமாக அவர்கள் "சம்பூரணமுள்ளவர்களாக்கப்பட்டனர்" என்று பவுல் எழுதுகிறார் (வ.5-9). கிறிஸ்து என்ற இந்த விலைமதிப்பற்ற ஈவை மதிக்கும்படி அவர் அவர்களைத் தூண்டுகிறார். அவர்கள் அவரை உடையவர்களாய் இருந்தால், அவர்களுக்கு ஒன்றும் குறைவிருக்காது என்பதையும் அவர் நினைவுபடுத்துகிறார். இது தவிர, தேவன் அவர்களுக்கு வழங்கிய பல "ஆவிக்குரிய வரங்களை" கருத்தில் கொள்ளுமாறு பவுல் சபையாரை வலியுறுத்துகிறார் (வ.5-7). கிறிஸ்துவாகிய இந்தப் பொக்கிஷத்தைச் சபையானது பாதுகாக்கும் போது, அவர் திரும்பும் நாள் வரை குற்றமற்றவர்களாக இருக்க அது அவர்களுக்கு உதவும் என்று அவர் நம்புகிறார்.
வாழ்க்கையில் நாம் அதிருப்தி அடையும்போது, குறிப்பாக நம்மிடம் இல்லாததைப் பற்றி முணுமுணுக்கும்போது, நாம் இயேசுவைக் கொண்டிருப்பதால் நாம் உள்ளார்ந்த ஐசுவரியவான்கள் என்பதை நினைவில் கொள்வோம். இழப்பு, நிதி நெருக்கடி, குடும்பக் கஷ்டம் அல்லது வேறு ஏதேனும் கொந்தளிப்பு ஏற்படும் நேரங்களில், நாமும் நம் தகப்பனால் எல்லா வகையிலும் உண்மையிலேயே "சம்பூரணம்" அடைந்துள்ளோம் என்பதை நினைவில் கொள்வோம். பரிசுத்த ஆவியானவரின் பிரசன்னத்தின் மூலம் கிறிஸ்தென்னும் பொக்கிஷத்தை அவர் நம்மில் விதைத்துள்ளார் (2 கொரிந்தியர் 1:22).
ரேகாவை பற்றி சுமதி கூறும்போது, அவள் தன் தோழியின் “தேவன் மீதான ஆழமான, காலத்தால் சோதிக்கப்பட்ட விசுவாசம்” மற்றும் நாட்பட்ட பலவீனமான நிலையில் வாழும் போதும் அவள் வளர்த்துக் கொண்ட சகிப்புத்தன்மையைப் பெரிதாகப் பேசுவாள். பதினைந்து வருடங்களுக்கும் மேலாக, ரேகா தனது அறையின் சிறிய ஜன்னலிலிருந்து நிலவைக் கூட பார்க்க முடியாமல் படுத்த படுக்கையாய் கிடந்தாள். ஆனால் அவள் நம்பிக்கையை இழக்கவில்லை; அவள் தேவனை நம்புகிறாள்; வேதாகமத்தைப் படிக்கிறாள், கற்கிறாள். இதை, “மனச்சோர்வுக்கு எதிரான கடுமையான யுத்தத்தின் போது எவ்வாறு உறுதியாக நிற்பது என்று அவள் அறிவாள்” எனச் சுமதி விவரிக்கிறாள்.
ரேகாவின் உறுதியையும் விடாமுயற்சியையும், பெலிஸ்தியரிடமிருந்து தப்பியோட மறுத்த தாவீது ராஜாவின் காலத்திலிருந்த எலெயாசார் எனும் வீரனோடு சுமதி ஒப்பிடுகிறாள். முறிந்தோடிய படைகளோடு சேருவதற்குப் பதிலாக, அவன் “எழும்பித் தன் கைசலித்து, தன் கை பட்டயத்தோடு ஒட்டிக்கொள்ளுமட்டும் பெலிஸ்தரை வெட்டினான்” (2 சாமுவேல் 23:10). தேவனுடைய வல்லமையின் மூலம், “அன்றையதினம் கர்த்தர் பெரிய ரட்சிப்பை நடப்பித்தார்” (வச. 10). சுமதி அவதானிப்பதுபோல், எலெயாசார் உறுதியுடன் வாளை பற்றிக்கொண்டதுபோல, ரேகாவும் “தேவவசனமாகிய ஆவியின் பட்டயத்தை” (எபேசியர் 6:17) பற்றிக்கொள்கிறாள். அதிலே, தேவனிலே, அவள் தன் பெலனைக் காண்கிறாள்.
நல்ல ஆரோக்கியத்துடன் இருந்தாலும் சரி அல்லது நாள்பட்ட நோயால் மனச்சோர்வடைந்தாலும் சரி, நம் நம்பிக்கையின் களஞ்சியத்தை ஆழப்படுத்தவும், சகிக்கும்படி நமக்கு உதவவும் நாமும் தேவனை நோக்கிப் பார்க்கலாம். கிறிஸ்துவில் நாம் நமது பலத்தைக் காண்கிறோம்.
கணவனைப் பிரிந்த அந்த தாயார், ஐந்து வருடங்களுக்கும் மேலாக நற்குணசாலியான முதியவரின் வீட்டருகே வசித்து வந்தார். ஒரு நாள், அவள் நலனில் அக்கறை கொண்டு, அவள் வீட்டுக் கதவைத் தட்டினார். “ஒரு வாரமாக உன்னைப் பார்க்கவில்லையே, உன்னை நலம் விசாரிக்கவே வந்தேன்” என்று அவர் கூறினார். அவரது “கரிசனையான விசாரிப்பு” அவளை ஊக்கப்படுத்தியது. சிறு வயதிலேயே தந்தையை இழந்ததால், தன்னையும் தன் குடும்பத்தையும் கவனித்துக் கொள்ளும் அன்பான மனிதனைப் பாராட்டினாள்.
இலவசமாகக் கொடுப்பதற்கும் விலையேறப்பெற்றதாய் பெறுவதற்குமான இரக்கம் எனும் வெகுமதியால், வெறுமனே நலலவர்களாக இருப்பதைக் கடந்து கிறிஸ்துவின் அன்பைப் பகிர்ந்து கொள்வதன் மூலம் நாம் பிறருக்கு ஊழியம் செய்கிறோம். எபிரேயரின் எழுத்தாளர், இயேசுவை விசுவாசிப்பவர்களிடம், “அவருடைய நாமத்தைத் துதிக்கும் உதடுகளின் கனியாகிய ஸ்தோத்திரபலியை அவர் மூலமாய் எப்போதும் தேவனுக்குச் செலுத்தக்கடவோம்” (எபிரெயர் 13:15) என்றார். பின்னர் தங்கள் விசுவாசத்தை வாழ்ந்து காண்பிக்கும் பொருட்டு, “அன்றியும் நன்மைசெய்யவும், தானதர்மம்பண்ணவும் மறவாதிருங்கள்; இப்படிப்பட்ட பலிகளின்மேல் தேவன் பிரியமாயிருக்கிறார்” (வ. 16) என்று ஆக்கியோன் எழுதினார்.
இயேசுவின் நாமத்தை அறிக்கையிட்டு, அவரை ஆராதிப்பது மகிழ்ச்சியும் பாக்கியமும் ஆகும். ஆனால் இயேசுவைப் போல நாம் அன்பு செலுத்தும்போது, தேவன் மீதான உண்மையான அன்பை வெளிப்படுத்துகிறோம். நம் சொந்தக் குடும்பங்களுக்குள்ளும் அதற்கு அப்பாலும் பிறரை நன்றாக நேசிக்க நம்மை ஆற்றல் படுத்தவும், அப்படிப்பட்ட வாய்ப்புகள் குறித்து உணர்வுள்ளவர்களாக்கவும் பரிசுத்த ஆவியானவரிடம் மன்றாடலாம். அத்தகைய ஊழிய தருணங்களின் மூலம், கிரியை செய்யும் அன்பின் வல்லமையான செய்தியின் மூலம் இயேசுவைப் பகிர்ந்து கொள்வோம்.